பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள் தடை; ராமதாஸ் வரவேற்பு.!!!

பப்ஜி எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி மேலும் 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் 18 கோடி பேர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்த பப்ஜி மொபைல் கேம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியது:-

“இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள்.

பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன்.

பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி.

பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே