இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைப்பது, மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்திற்கு செல்லவே வழிவகுக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனாவை பற்றி மருத்துவ உலகமே குழம்பித் தவித்த காலம் தாண்டி, இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்று விட்டனர்.
இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு செல்ல இயலாத அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்திற்கு செல்லவே வழிவகுக்கும்.
எனவே வரும் ஆகஸ்ட் 31-க்கு பின் ஊரடங்கு தேவைதானா என்று அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
அதற்கு இ-பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
ஊரடங்கு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.