டெல்லி: எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க பதிலடி தரப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அவர் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: எல்லைகளை காப்பதில் வீரம் நிறைந்த நம் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் பாரத மாதாவின் உயரிய மகன்கள். தேசத்தின் பெருமைக்காக வாழ்ந்து, மறைந்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முழு தேசமும் தலை வணங்குகிறது. எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க பதிலடி தரப்படும்.
2020ம் ஆண்டில் சில கடினமான படிப்பினைகளை கற்று கொண்டுள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரசானது, இயற்கையை அடக்கி ஆள்பவன் மனிதன் என்ற மாயையை அழித்துவிட்டது. மனித குலமானது, தம்மை திருத்திக் கொண்டு இயற்கையுடன் நல்லிணக்கத்தோடு வாழும் காலம் கடந்து விடவில்லை.
சுதந்திர இந்தியாவின் குடிமகன்கள் இளைஞர்கள் உணர வேண்டும். நமது விடுதலைக்கு வழிகாட்டியான மகாத்மா காந்தி இருந்தது நமக்கு அதிர்ஷ்டம். அவர் ஒரு துறவியாகவும், அரசியல் தலைவராகவும் இருந்தார். இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் உயிர்க்கொல்லி வைரசை எதிர்கொண்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான போரில் செயல்பட்டு கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுக்கு தேசம் கடன்பட்டு உள்ளது.
மனித சமூகம் முன் உள்ள இந்த சவாலை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்று பேசினார்.