கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை (EIA 2020) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமானது; இயற்கை மற்றும் விவசாயத்தை முற்றிலும் நாசமாக்கக் கூடியது என்பது எதிர்ப்பாளர்களின் புகார்.
நாடு முழுவதும் இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசும் இந்த வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த வரைவு அறிக்கை குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழக அரசின் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.