நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை காட்டுமாறு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினான்.

இந்த கருணைமனுவை நிராகரிக்குமாறு டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது.

டெல்லி துணை நிலை ஆளுநரும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குப் பிறகு கருணை மனு, நேற்றிரவு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த நிலை அறிக்கையை திஹார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது.

மேலும் குற்றவாளிகள் நான்கு பேரும் திஹாரில் சிறை எண் நான்கிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தூக்கு மேடை அங்கு தான் உள்ளது என்பதால் நான்கு பேரையும் சிறை எண் நான்கில் தனித்தனி அறையில் அடைத்து கண்காணித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே