முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு – நீதிமன்றத்தில் திமுக வழக்கு..!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்துக்கு எதிரான திமுக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

2021 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

இதனிடையே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரியான உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழு கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். 

இதன் முடிவில், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இதுகுறித்து பேசிய உமேஷ் சின்கா, உடல்நலம் குன்றியவர்களை வாக்குச்சாவடிக்கு வரச் சொல்வது சரியாக இருக்காது என்று கூறினார்.

இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தபால் வாக்கை வாக்குசாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது .

அதனால் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் எனவும் திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே