பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் வேளாங்கண்ணியில் இன்று 3ம் நாள் பிரசாரத்தை துவக்கினார்.
காலை 9.30 மணிக்கு தனியார் ஓட்டலில் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல.
பழிபோடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி. மக்கள் நீதி மய்யம் மக்கள் மையமாக இருக்கும்.
இங்கு வந்துள்ள மகளிருக்கு பாதுகாப்பாக இருப்போம். பிற அரசியல்வாதிகள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வர சொல்லவில்லை.
இது தானாக வந்துள்ளது. இது கூட்டம் அல்ல, குடும்பம்.
ஓட்டு சேர்க்க உங்களிடம் நான் வரவில்லை. சேகரித்து கொடுங்கள் என கேட்டு வந்துள்ளேன்.
மகளிரிடம் ஏன் பேசுகிறேன் என்றால் ஆண்கள் செல்ல முடியாத இடத்திற்கெல்லாம் பெண்கள் செல்வார்கள். அதற்காக பேசுகிறேன்.
நமது நோக்கம் எளிதாகிவிடும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். பெண்களை பாதுகாக்க இந்த அரசு தவறி விட்டது.
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் செய்பவர்களை இந்த அரசு கண்டிக்க தவறிவிட்டது. இதனால் ரவுடியிசம் பெருகி விட்டது. மநீம பெண்களை பாதுகாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.