நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடி குறித்து பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ சர்சைக்குள்ளனது. இதற்கு அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் கூறும்போது, எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் “தாங்கள் பால் பாக்கெட்டுகள் போட்ட இடத்தில் தான் தான் இருப்பதாகவும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை” என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இந்த பிரச்னையில் தொடக்க புள்ளியாக, எம்.ஜி.ஆர் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் அமைந்தது. இது சம்மந்தமாக பேசிய தமிழக முதலமைச்சர் தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப் போகிறாரா எனவும் தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், தேசிய கோடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.