திருச்சி மாவட்டம் லால்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சென்று வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற ஊராட்சி ஒன்றிய சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் 45 ஊராட்சி, 25 ஒன்றியம், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் லால்குடி பகுதியில் 20 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் செல்வராணி.
இவர் இன்று திடீரென குமுலூர் வேளாண்மை பொறியியல் கல்லூரிக்குள் புகுந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் படி கூறியுள்ளார்.
அதனைக் கண்டு குழப்பம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர்,
- வாக்குப்பதிவின் போது மதியத்திற்கு மேல் என்னுடைய சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்றும்;
- மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.
- ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தலை முடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
- அதனால், இந்த வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
அதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடியாது என்றும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனைக் கேட்காத செல்வராணி அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் போலீசாருக்கும் செல்வராணிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் செல்வராணி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அவரை கைது செய்யும் முயற்சியையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

