மும்பை, கொல்கத்தா, நோய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த உயர்திறன் கொண்ட கொரோனா பரிசோதனைகளை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், ‘சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு தான்.
உலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர்.
கொரோனா உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகத்தான் உள்ளது.
இந்தியாவில் 10 இலட்சம் பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உயர்திறன் சோதனை மையங்கள் மூலம், எதிர்காலத்தில் HIV, டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் செய்ய முடியும். உயர் பரிசோதனை மையங்களால், மராட்டியம், உ.பி.,மேற்கு வங்கம் தொற்றுக்கு எதிராக வலிமையுடன் போராடும்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையப்புள்ளிகள், கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.
தினமும் 3 லட்சம் என் 95 முகக்கவசங்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் உள்ளன.
கொரோனாவுக்கு மட்டுமின்றி எச்ஐவி, டெங்கு ஆகியவைக்கும் பரிசோதனை செய்யலாம்,’ என்றார்.