தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், 11-ம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பாடத்தின் போதும் கொரோனா பரவல் காரணமாக, பலர் தேர்வு எழுதவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது.
உயர் கல்வி, தொழிற்கல்வி என்று பல முக்கிய விவகாரங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையாக இருக்கும் காரணம் முன்வைக்கப்பட்டது.
பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்திய நிலையில், வரும் ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை
ஜுன் 1-ல் மொழிப்பாடமும், 3-ம் தேதி ஆங்கிலமும், 5-ம் தேதி கணிதமும், 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும், 8-ம் தேதி அறிவியலும், 10-ம் தேதி சமூக அறிவியலும், 12-ம் தேதி வொகேஷனல் பாடத்திற்கான தேர்வுகள் நடக்கும்.
அனைத்து தேர்வுகளுமே காலை நேரத்தில் நடத்தப்பட உள்ளன.
பிளஸ் 1 தேர்வு அட்டவணை
ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வேதியல், கணக்குப்பதிவியல், புவியல், மற்றும் கண்ணக்குப்பதிவியல் தியரி ஆகியவை ஜுன் 2-ம் தேதி காலை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மறுதேர்வு
மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடைசியாக நடந்த பாடத்தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்காக, ஜுன் 4-ம் தேதி காலை வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியல் தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.