பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை நிறுத்த பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு!

தெலுங்கானா பெண் கால்நடை மருத்துவர் எரித்து கொல்லப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து பாட்டில்கள் மூலம் பெட்ரோல் வழங்குவது தடை செய்யப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து கடலூரில் செய்தியாளருக்கு பேட்டியளித்த பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் முரளி, பல ஆண்டுகளாகவே பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற தடை இருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெட்ரோல் வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது தெலுங்கானாவில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் டீலர்களில் பாதுகாப்பு கருதியும் பெட்ரோல் வழங்குவது இன்று முதல் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உடனடியாக இது நடைமுறைப் படுத்துவதாக தெரிவித்த அவர் எந்த பெட்ரோல் பங்க்கிலும் இனி பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே