வரும் 16-ம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவ. 13) வெளியிட்ட அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிந்தும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைப்பட்டுள்ளதாகவும், குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் வரப்பெற்றன.

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 16.11.2020 முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே