அடுத்த ஆண்டு ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தற்போதும் உலகெங்கிலும் உள்ள 200க்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாக பரவிவருகிறது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தியது.
எனினும் பல மாதங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்வதால் `பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளது.
சுந்தர் பிச்சை
இந்நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அடுத்த ஆண்டு ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யாலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான திட்டத்தை நீட்டித்துள்ளோம். இது உலகின் பல நாடுகளில் உள்ள அனைத்து கூகுள் நிறுவனங்களுக்கும் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அடுத்தடுத்த மாதங்களில் கூகுள் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.