ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஏழை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் எப்படி விநியோகிப்பது என்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது. சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞர் சுதா வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்று தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அப்படியானால் மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
மேலும், பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு முட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.