சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதனால் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

அதனை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க உத்தரவிட்டது.

பொன் மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து உயர் நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

விசாரணை அறிக்கையை தருவதில்லை என கூறி பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொன் மாணிக்கவேல் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே