முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நன்றி..!!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு உதவி என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

திமுகவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சண்டை ஏற்பட்டது அனைவரும் அறிந்தது. பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியுடன் தனித்துச்செயல்பட தொடங்கினார்.

தற்போது ஓ.பி.எஸ்., இபிஎஸ் என இருவரும் தனித்தனியே அறிக்கைவிட தொடங்கிவிட்டனர். அவர்களது ஆதரவாளர்களும் மோதல்போக்குடன் செயல்பட தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் அரசு விழாவில் ஓ.பி.எஸ்.,க்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவே தற்போது அதிமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே