தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கும் இடையே போட்டி நிலவும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
சில தினங்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி.
அதனைத் தொடர்ந்து தனது அரசியல் வருகை குறித்து ரஜினி எப்போது வேண்டுமானாலும் அறிக்கை விடலாம் என்ற சூழல் நிலவியது.
அதன்படி இன்று (டிசம்பர் 3) ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகைக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விகள் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும்; பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.