இன்னோவா கார் இல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்!!

இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது என்றும் அவர்கள் பிழைக்கவும் முடியாது என்றும் நாஞ்சில் சம்பத் தெரித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றிபெற செய்யும் மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என்று அக்கட்சியின், மாநிலத் தலைவர் எல். முருகன் நேற்று அறிவித்திருந்தார்.

இது குறித்து, நாஞ்சில் சம்பத் கூறியுள்ளதாவது, ” பா.ஜ.க அதிகாரத்தின் மூலம் மிகப்பெரிய துஷ்பிரயோகத்தைச் செய்யப்போகிறது. அதிகார அத்துமீறலுக்கு தயாராகி எந்த விலை கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும் என்கின்ற தரங்கெட்ட அரசியலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் போகிறது.

ஏற்கனவே, பல மாநிலங்களின் ஸ்திரத்தன்மையை சின்னாபின்னப்படுத்தி ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வந்த, இந்தக் காவிக்கும்பல் பெரியாரின் பூமியில், அண்ணாவின் நந்தவனத்தில், கலைஞரின் பூந்தோட்டத்தில் கால்வைக்க எத்தனிக்கிறது.

வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் என்றால், இனி என்ன பாவம் செய்யப்போகிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்திட வேண்டும். இந்த அறிவிப்பு தேர்தல் காலத்தில் பா.ஜ.க பல்லாயிரக் கணக்கான கோடிகளை செலவழிக்க தயாரவிட்டது என்பதையேக் காட்டுகிறது.

அதாவது, பாசிசம் பயின்றிடாத பைந்தமிழ் நாட்டில் தங்களை நிலைநிறுத்த முடியுமா? என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு நான் எச்சரிக்கையாக சொல்கிறேன்.

இன்னோவா கார் அல்ல. ஏரோப்ளேன் வாங்கிக்கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது. அவர்கள் பிழைக்கவும் முடியாது” எனக்கூறியுள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே