2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

செல்கள் ஆக்சிஜனை எவ்வாறு கிரகித்துக் கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற நோபல் விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

  • அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி காலின்,
  • கிரேக் எல் செமென்ஸா,
  • இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிப் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூன்றுபேரும், மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

ஆக்சிஜன் எப்படி செல்களின் வளர்சிதை மாற்ற மற்றும் உடலியல் செயல்பாடுகளில் பங்காற்றுகிறது என்பதை மூன்று பேரும் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளதாக நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது.

உடலில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் போது, எரித்ரோப்டின் என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்குகிறது.

இந்த ஹார்மோன் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் அதிக அளவிலான சிவப்பு அணுக்கள் கூடுதல் ஆக்சிஜனை கிரக்கித்து, உடலின் ஆக்சிஜன் தேவையை ஈடுகட்டுகிறது.

இந்த அறிவியில் உண்மை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டது. ஆனால் எரித்ரோப்டின் சுரப்பு நிகழ எது காரணம் என்பதையை மூன்று பேரும் கண்டறிந்து உள்ளனர்.

ஆக்சிஜன் அளவு ரத்தத்தில் குறையும் போது, ரத்தத்தில் உள்ள புரத கூட்டுப் பொருளான ஹெச்.ஐ.எப். அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது.

இது எரித்ரோப்டின் ஹார்மோன் சுரப்பை தூண்டி, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதாக விஞ்ஞானிகள் மூவரும் கண்டறிந்து உள்ளனர்.

ஆக்சிஜன் அளவு போதுமானதாக இருக்கும் போது, புரத கூட்டுப் பொருள், வேகமாக ரத்தத்தில் கரைந்து கலப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்தசோகை, புற்றுநோய் பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வுகாண மூன்று பேரின் கண்டுபிடிப்புகளும் உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்த மூன்று ஆய்வாளர்களும் 6.52 கோடி ரூபாய் பரிசை சரிசமமாகப் பிரித்துக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே