AICTE சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை – உயர்கல்வித்துறை அமைச்சர்

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை நடத்த வேண்டும் என இதுவரை அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால், இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை தவிர பிற ஆண்டு செமெஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் கட்டணத்தை செலுத்தி விட்டு அரியர் தேர்வு எழுத காத்திருந்த மாணவர்களின், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ‘எங்கள் பாகுபலி’ என்றெல்லாம் புகழாரம் சூட்டி, முதல்வருக்கு மாணவர்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி இருந்தனர்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தான் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பதே ஏ.ஐ.சி.டி.இ – இன் விதியாக இருப்பதாகவும் ஏ.ஐ.சி.டி.இ கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அமைச்சர் அன்பழகன், இது ஏ.ஐ.சி.டி.இ இன் கருத்து இல்லை, சூரப்பா தனது கருத்தை திணிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா என்ன பதில் கடிதம் எழுதினார் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு சூரப்பா உரிய பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே