வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கட்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கில் ஏறக்குறைய 1120 கிலோ மீட்டர் தூரத்திலும், இலங்கையில் உள்ள திருகோணமலைக்கு தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்கிழமை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2 அன்று இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரும்.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் கன மழை வரையிலும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல், தமிழகக் கடலோரப் பகுதி, கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு திங்கட்கிழமை கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், தேவிப்பட்டிணம், எஸ்.பி பட்டிணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலுரந்து நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை விவரம்:

ராமேசுவரம் 13 மி.மீட்டர், தங்கச்சிமடம் 8 மி.மீட்டர், தீர்த்தாண்டதானம் 7 மி.மீட்டர், ராமநாதபுரம் 3 மி.மீட்டர், பாம்பன் 5 மி. மீட்டர் என்ற அளவில் மழை அளவு பதிவானது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே