கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7ஆம் தேதி அன்று இரண்டாவது அனல்மின் நிலையத்திலிருந்த 6வது யூனிட்டில் ஏற்பட்ட தீ விபத்து 5 நபர்கள் உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில்,
“கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.