இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தியதுடன் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடனும், கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். தேர்தலின் போது பண பட்டுவாடாவை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சுனில் அரோரா, இரண்டு நாள் தமிழக விசிட்டை நிறைவு செய்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த தகவல்களின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்…
- தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது!
- தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
- வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாள்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
- பொதுவாகவே தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாகவே இருக்கும். அதனை மேலும் அதிகரிக்க புதிய திட்டம்!
- புதிய வாக்காளர்கள், பெண்கள் முதியவர்களுக்கு முக்கியத்துவ அளிக்கப்படும்.
- கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் தேர்தல் நடப்பதால், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.
- கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,000 என்னும் எண்ணிக்கையில் இருந்து 93,000 என்னும் அளவில் உயர்த்தப்படும்.
- தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்
- வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்.
- இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
- தமிழகத்தில் காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும், சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்..!!