நாளை பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்..!!

பீகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் தொடர்ந்து 4ஆவது முறையாக நாளை மாலை பதவியேற்கவுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில் பாஜக அதிகபட்சமாக 74 தொகுதிகளில் வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் பிற 2 கூட்டணி கட்சிகள் தலா 4 தொகுதிகளிலும் வென்றன.

இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பாட்னாவிலுள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளரான மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பட்னவீஸ், 125 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு நிதிஷ் குமாரை ஒருமனதாக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.

இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று ஆளுநர் பாகு செளஹானிடம் நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அப்போது 125 கூட்டணி எம்எல்ஏக்கள், 1 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், நாளை மாலை 4 முதல் 4.30 மணிக்குள் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தெரிவித்தார்.

69 வயதாகும் நிதிஷ் குமார், இதுவரை தொடர்ந்து 3 முறை பீகார் முதலமைச்சராக ஆட்சி புரிந்துள்ளார்.

நாளை அவர் பதவியேற்க இருப்பது தொடர்ந்து 4ஆவது முறையாகும். ஆளுநருடனான சந்திப்பின்போது நிதிசுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் பாஜக மூத்த தலைவரான துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி இல்லை.

இதனால் அவர் துணை முதலமைச்சராக பதவியேற்பாரா, இல்லையா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

நீண்டகாலமாக அவர் துணை முதலமைச்சராக இருந்ததால் டர்கிசோர் பிரசாத், காமேஸ்வர் செளபால் அல்லது பிரேம்குமார் ஆகியோரில் ஒருவர் துணை முதலமைச்சராக பதவியேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஆளுநரை ராஜ்நாத் சிங்கும், சுசில்குமார் மோடியும் நேரில் சந்தித்து பேசினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே