துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு

துருக்கியில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

துருக்கி நாட்டின் பிட்லிஸ் மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வியாழக்கிழமை அன்று, வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட பல்வேறு வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள பனிமலைப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் உள்பட ராணுவ 9 வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மூடு பனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குர்திஷ்தான் எனும் தனி நாடு உருவாக்குவதற்காக போராடிவரும் குர்திஷ் போராளிகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட துருக்கி படைப்பிரிவைச் சேர்ந்த குழுவினர்தான் இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே