புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி, கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளதாகவும், ஏற்கனவே யூனியன் பிரதேசத்தில் இருவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருவதால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, முறையிட்டார். இதேபோல வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரும் ஆஜராகி முறையிட்டார்.

முறையீடுகளை ஏற்ற நீதிபதிகள், பிற்பகல் வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே