டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்..!!

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு தயாரிப்பாளர்களுக்கென தென்னிந்திய திரைப்பட வர்த்தக சவை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கம் (கில்டு), தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என நான்கு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லி அதில் போட்டியிட்டு தோல்வியடைந்த டி.ஆர் தலைமையிலான தரப்பினர் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை ஆரம்பிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதன்படி இன்று(டிச..,5) அந்த சங்கத்தை முறைப்படி அறிவித்து, அதன் நிர்வாகிகளையும் டிஆர் தெரிவித்துள்ளார். சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் உள்ளனர்.

தலைவராக டி.ராஜேந்தர், துணைத் தலைவர்களாக பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜேஎஸ் சதீஷ்குமார், இணைச் செயலாளர்களாக கே.ஜி.பாண்டியன், அசோக் சாம்ராஜ், சிகரம் சந்திரசேகர், பொருளாளராக கே.ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிங்காரவடிவேலன், ஜேஎஸ் சதீஷ்குமார் ஆகியோர் நடைபெற்று முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்.

இச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:

1. புதிய, சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைகின்றனர்.

இந்த புதிய சங்கத்துடன் சேர்த்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கென செயல்படும் சங்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே