பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நவம்பர் 23-ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவாக சென்னை மெட்ரோ ரயில்களில் முதல் வகுப்பு பெட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே பயணம் செய்வார்கள்..
இப்போதும் அப்படித்தான் உள்ளது..
ஆனால், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது.
அதன்படி, நவம்பர் 23ம் தேதி முதல் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்யேகமான பெட்டிகளாக மாற்றபடுகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில் சொல்லி உள்ளதாவது:
“வருகின்ற 23.11.2020 (திங்கள்கிழமை) முதல் மெட்ரோ ரயிலில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன..
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் மகளிர் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தினை வழங்கி வருகிறது.
பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 23.11.2020 (திங்கள்கிழமை) முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும்.
தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
இதை தவிர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்புக் கேமிராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிப்பது, மகளிருக்கென தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்கத் தடை, புகை பிடிப்பதற்கு தடை மற்றும் பிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பது, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்தி கண்காணிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.