மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95 வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரம் கோடி மதிப்பிலான அடல் நீர் மேலாண்மைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 8 ஆயிரத்து 350 கிராமங்கள் பயனடையும் என்றும் பிரதமர் கூறினார்.
குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறையை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தண்ணீரை சேமிக்க பாடுபடுவது ஒவ்வொருவருடைய கடமை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து கிராமங்களையும் நிலத்தடி நீர்மட்டத்தில் தன்னிறைவடையச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.