தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறினார் மீராமிதுன். மேலும், இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.
அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது” என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக ஒரு பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” சமூகம் பயன் பெற, நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நன்றி” தெரிவிப்பதாக நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.