நடிகர் சுஷாந்த் மரண விவகாரத்தில், நடிகை ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இப்போது சிபிஐ வசம் வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்தனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். தந்தை அளித்த புகாரின்பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ச
ுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சுஷாந்த் தற்கொலையில் நடிகை ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் தெரிவித்துள்ளது.