மிக தகுதியானவர்..’ டி.இமானை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய விருதை வென்று, தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தியவர்களில் இசையமைப்பாளர் டி.இமானும் ஒருவர்.

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற சிறப்பான பாடல்களுக்காக தேசிய விருதை வென்றார் இமான். அந்தப் படத்தில் ’கண்ணான கண்ணே’, ’வானே’, ‘அடிச்சி தூக்கு’ போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.இமானை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இமானும் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார். “கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்பான இசை காதலர்களின் தொடர்ச்சியான ஆதரவு! சிறந்த இசை இயக்குனர் வகையில் தமிழ் இசைக்கு கிடைத்த தேசிய விருது அறிவிப்பில் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். கடவுளைத் துதியுங்கள்!” என டி.இமான் பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த, ஆஸ்கார் நாயகனும், பல தேசிய விருதுகளை வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான், “வாழ்த்துகள்… மிக தகுதியானவர்” என இமானை வாழ்த்தியிருக்கிறார். சற்று நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பாராட்டு ட்வீட் வைரலாகியது. தவிர, இசைப்புயலின் இசைக்கு உலகெங்கும் இருக்கும் ரசிகர்களைப் போல, இமானும் பெரிய ரசிகர் என்பதை, பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே