ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் பல இடங்களில் வசித்த 228 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதியவர்களும், குழந்தைகளும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் வீடு திரும்பிய நிலையில், 76 பெண்கள் மற்றும் 46 குழந்தைகள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 வயது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து விஜயவாடா மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவசரகால மருத்துவ உதவிமையமும் விஜயவாடாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவ குழுவினர், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில், எந்த பிரச்னையுமில்லை என தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சர் அல நானி கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எலுருவில் 150 படுக்கைகளும், விஜயவாடாவில் 50 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். அனைத்து வித நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
முதல்வர் ஜெகன்மோகன், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார் என கூறினார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற அவர் நோயாளிகளின் உடல்நிலையை கேட்டறிந்தார்.