இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சம் மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று அரசு ஆய்வகங்களில் 1,71,587 மாதிரிகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் 43,608 மாதிரிகள் என மொத்தம் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 73,52,911 ஆக உயர்ந்துள்ளன. ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச பரிசோதனை இதுவாகும்.
இந்தியா முழுவதும் தற்போது 1,000 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்கள் 730, தனியார் ஆய்வகங்கள் 270.
கரோனா தொற்றிலிருந்து நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 10,495 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,58,684 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 56.71 சதவிகிதமாக உள்ளது.
தற்போதைய நிலையில் 1,83,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.