வரலாறு படைத்தார் மிதாலி ராஜ்: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை எனும் பெருமையை, வரலாற்றை மிதாலி ராஜ் இன்று படைத்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லக்னோவில் நடந்துவரும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 36 ரன்களை மிதாலி ராஜ் எடுத்த போது இந்த புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார்

இதன் மூலம் ஒருநாள் , டெஸ்ட், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய உலகில் 2-வது வீராங்கனை எனும் பெருமையையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து அணியின் சார்லோட்டி எட்வார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரி்க்க மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் 28-வது ஓவரை அன்ன போஸ் வீசினார். அவரின் ஓவரில் மிதாலி ராஜ் பவுண்டரி அடித்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை எட்டிய பெருமையை அடைந்தார்.

தனது 212 ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், இதுவரை 6,974 ரன்கள் குவித்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களும் 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களும் மிதாலி சேர்த்துள்ளார்

மிதாலி ராஜ் அடைந்த மைல் கல் குறித்து பிசிசிஐ ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், “ என்ன அருமையான சாம்பியன் கிரிக்கெட் வீராங்கனை. சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரங்கனை மிதாலிராஜ்” எனத் தெரிவித்துள்ளது.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறுகையில் “ சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டும் 2-வது வீராங்கனை, இந்தியாவில் முதல் வீராங்கனை மிதாலி ராஜ் எனக் கூறும்போது பெருமையாக இருக்கிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் மிதாலி தொடர்ந்து நிலையாக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே