63 துப்பாக்கி குண்டுகள் முழுங்க அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்..!!

உடல்நலக்குறைவால் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (31.10.20) இரவு 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அதனைத் தொடர்ந்து அமைச்சரின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சரின் உடலுக்கு அவரது உறவினர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதே போல துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அமைச்சரின் உடல், வன்னியடியில் உள்ள தென்னந்தோப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு 63 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே