மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் 325 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று (அக். 17) விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரான அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சிக் கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவர்கள்தான் ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கில், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவு.

சதவீதக் கணக்கை எடுத்துப் பார்த்தால் மிக மிகக் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 4 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இந்த ஆண்டு 300-லிருந்து 325 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும்”.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே