மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் (81) திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் சங்கனாங்குளம் கிராமத்தில் பிறந்த டி.ஏ.கே.இலக்குமணன், ஆலைத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி, திமுகவின் நான்குனேரி வட்ட செயலராகவும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டப் பொருளாளராகவும், மாவட்டச் செயலராகவும், மதிமுகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலராகவும் பணியாற்றியவர்.
சுமார் 55 ஆண்டுகள் திராவிட இயக்கத்துக்காக உழைத்தவர். டி.ஏ.கே.இலக்குமணனுக்கு மனைவி மாணிக்கத்தாய் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
அவருடைய இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.
இதனிடையே மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.