ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முடிவெடுத்து உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,8,23,7600 குடும்ப அட்டைகளில், 6,74,15,899 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் 13,48,31,798 மறு பயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது.
இந்த முகக்கவசங்களை காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல இந்த முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் முகக்கவசங்கள் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ளன.
விரைவில் மீதமுள்ள 7 கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்க உள்ளார்.