கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் – அதிமுக அரசுக்கு ரஜினி எச்சரிக்கை

அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன.

தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்குகளில், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கவும் உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது.

இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது விற்பனை இல்லாததால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உடனடியாக ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது சாத்தியமில்லை என்றும், அதற்கான சட்டவிதிகளும் தமிழகத்தில் இல்லை என்பதால் ஆன்லைன் விற்பனை தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கபடுவதற்கு முன், தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி, பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மகாலட்சுமி மற்றும் மகளிர் ஆணையம் அமைப்பின் லட்சுமி மணியரசன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்றும்; கஜானாவை நிரப்ப நல்லவழிகளை பாருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே