வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை – மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை..!!

வேலூர் அருகே 3 பேரை தாக்கிவிட்டு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா. நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே உருமல் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபோது அங்கிருந்த சிறுத்தை பிரேமாவை தாக்கியுள்ளது. இதனால் பயந்தில் பிரேமா அலறிய நிலையில் சத்தம் கேட்ட அவரது மகன் மனோகர், மகள் மகாலட்சுமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது அவர்களையும் சிறுத்தை தாக்கியுள்ளது.

இதனையடுத்து இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்க்கு சென்று மூன்று பேரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும் சிறுத்தை வீட்டிற்குள் சென்றதால் சிறுத்தையை உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு குடியாத்தம் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் இரவு நேரம் என்பதால் சிறுத்தையை பிடிக்காமல் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே