ரிஷப் பந்த், இஷான் கிஷன் போன்றோர் விராட் கோலியிடமிருந்து இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்- சேவாக் அறிவுரை

‘இன்று உன் தினம், உன் பேட்டிங் தினமாக இருந்தால் அனாவசியமாக அவுட் ஆகாதே. ஏனெனில் நாளை ரன்கள் எடுக்க முடியுமா என்பது நமக்கு நிச்சயமில்லை,

நன்றாக செட் ஆகி நன்றாக் ஆடிவரும் தினங்களில் விக்கெட்டை தூக்கி எறியாமல் நின்று வெற்றி பெறச் செய்து விட்டு வரவேண்டும் என்று இஷான் கிஷன், ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு விரேந்திர சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.

2வது டி20 போட்டியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்களை பின்னி எடுத்தாலும் ஆட்டமிழந்து சென்றார், பிற்பாடு அவரே இறுதி வரை நிற்க முடியாமல் ஆட்டமிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

ஆனால் கோலி நின்று மேட்சை பினிஷ் செய்து கொடுத்து விட்டுப் போனார். 73 ரன்களை 49 பந்துகளில் விளாசிய கோலி கடைசியில் சிக்சர் அடித்து முடித்து வைத்தார்.

இந்நிலையில் சேவாக் கூறியதாவது:

விராட் கோலியின் தினமாக களத்தில் அவருக்கு அமைந்தால் அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த வடிவமாக இருந்தாலும் இருந்து பினிஷ் செய்து விட்டு வெற்றியுடன் தான் திரும்புவார். இது விராட் கோலியின் பேட்டிங்கில் காணப்படும் சிறப்பு வாய்ந்த ஒரு அம்சமாகும்.

ரிஷப் பந்த், இஷான் கிஷன் ஆகியோர் கோலியிடமிருந்து இந்த ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் தினமாக இருந்தால் அவுட் ஆகாதீர்கள்.

டெண்டுல்கர் இதைத்தான் செய்வார், அவர் என்னிடம் கூறியிருக்கிறார், ‘இன்று உன் தினம், உன் பேட்டிங் தினமாக இருந்தால் அனாவசியமாக அவுட் ஆகாதே. ஏனெனில் நாளை ரன்கள் எடுக்க முடியுமா என்பது நமக்கு நிச்சயமில்லை, எனவே பேட்டிங் சிறப்பாக வரும் நாளை முழுதும் பயன்படுத்த வேண்டும், நாளை என்ன நடக்கும் என்று தெரியாது இன்று உனக்கு பந்து கால்பந்து சைஸுக்குத் தெரிகிறது, எனவே விக்கெட்டைப்பறிகொடுக்காதே’ என்பார். அதைத்தான் நான் ரிஷப் பந்த், இஷான் கிஷனுக்கும் பரிந்துரைக்கிறேன்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

அன்று இஷான் கிஷன் ஜார்க்கண்டிலிருந்து கிடைத்த இன்னொரு விக்கெட் கீப்பர்-அதிரடி பேட்டிங் பொக்கிஷம் என்று தோனியின் பெயரை குறிப்பிடாமல் சேவாக் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இன்று 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது, இதில் ராகுலுக்குப் பதில் ரோகித் சர்மா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித்தை உட்கார வைத்தது பற்றி சேவாக் கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே