புதுச்சேரியில் அரிசிக்குப் பதில் பணம் என்ற கிரண்பேடியின் உத்தரவு செல்லும் – உயர் நீதிமன்றம்!

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிக்கை மூலமாக விளக்கம் அளித்தார்.

அதில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இல்லை. மக்கள் தரமான அரிசியை வாங்கிக் கொள்ள இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்கக் கூறினேன். 

இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது என்று கூறினார்.

பின்னர் இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் அரிசி தான் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு இடையில் தான் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.

அப்பொழுது அவர் , புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே