தமிழகம் முழுவதும் உள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழு இரண்டு மாத காலம் செயல்பட கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது.
மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கவேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக்ககூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பணிகளுக்கு மட்டும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தலாம் என்றும் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.