ஷங்கர் – ரன்வீர் சிங் படத்தின் நாயகியாக கியாரா அத்வானி?

இயக்குநர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து இயக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்குப் பின் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளதாகவும், இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

தற்போது இந்தப் படத்தில் நாயகியாக பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘கபீர் சிங்’, ‘குட் நியூஸ்’ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நாயகியாக இருந்த கியாரா தற்போது ‘ஷேர்ஷா’, ‘ஜக் ஜக் ஜியோ’, ‘பூல் புலைய்யா 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கை, அனில் கபூர் நடிக்க நாயக் என்ற பெயரில் இயக்கினார் ஷங்கர். ஆனால் படம் அப்போது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதேநேரம், பின்னாட்களில் தொலைக்காட்சிகளில் நாயக் ஒளிபரப்பப்பட்ட போது அதற்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது. மேலும் ஷங்கரின் ‘எந்திரன்’, ‘2.0’ படங்களும் இந்தி மொழி பேசும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே