கேரள மாநிலத்தில் தோட்ட பணிக்கு சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயரம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இதையடுத்து, மாநிலத்தின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 7ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து விட்டது. அங்கு தேயிலை தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த பலர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டனர்.
அவர்களை மீட்கும் பணிகள் 5வது நாளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதுவரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டடுள்ளன. மேலும் சிக்கியிருப்பவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் சூர்யா நிலச்சரிவில் உயிரிழத்நர்களின் துக்கத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் இரங்கலை பதிவிட்டுள்ள சூர்யா,
“கேரளா இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.