9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதையடுத்து தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். பின்னர் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு முன்பாக தமிழக அரசு எந்த கலந்தாலோசனையும் செய்யவில்லை என்றும் அரசியல் நோக்கத்தையும், தேர்தலையும் கருத்தில் கொண்டு தான் அறிவித்துள்ளது. 

எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் ஆர்கே நந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான இந்த வழக்கு விசாணையின்போது, 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும், 10ல் 11ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்தி தேர்வு செய்யலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த பள்ளிகள் வெளியிட வேண்டும் என கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே