எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்க அவரது சொந்த ஊரில் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் முதலமைச்சர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி.
கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த தோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன.
ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், எம்.எஸ். தோனி இந்திய தேசத்திற்கும், அவர் பிறந்த ஜார்கண்ட் மாநிலத்திற்கும் எண்ணிலடங்கா புகழை தேடி தந்ததாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த தோனியை கவுரவிக்க அவர் பிறந்த ராஞ்சியில் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஹேமந்த் சோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.