இன்று தமிழக இடைக்கால பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு..!!

தமிழகத்தில் இன்று தாக்கல் ஆகும் இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு சலுகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக கட்சி தலைவர்கள் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். 

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவிக் காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதனால் தமிழக அரசின் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்காக தமிழக சட்டசபை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

ஏற்கனவே முதல்வர் பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும்.

அது மட்டுமன்றி பல்வேறு நலத்திட்டங்களை மேலும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இன்று தாக்கல் ஆகும் இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களை கவர பல்வேறு அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சலுகை அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே